சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம் 
தமிழகம்

கடலூர் சிறையில் கைதிகளை அடித்து துன்புறுத்தும் சிறைக் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி வழக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சிறையில் கைதிகளை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி, கடலூர் சிறைக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடலூர் சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தபோது அதே சிறையில் ஒன்பது கைதிகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் இணைந்து அவ்வப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

எனவே, அந்த ஒன்பது கைதிகளையும் பொது சிறைக்கு மாற்ற வேண்டும். சிறைக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறைச் செயலாளரிடம் மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலிக்க உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், "பாதிக்கப்பட்ட நபர்களால் அல்லாமல் மூன்றாம் நபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "சிறைச்சாலைகளில், தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் சமந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகள் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த மனுவுக்கு தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT