தமிழகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்; சென்னையில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.

தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் இன்று (டிச.12) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”மாண்டஸ் புயலின் மீதம் உள்ள பகுதி வட தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவி வருகிறது. இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து நாளை மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்லும். அங்கு நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது வரும் நாட்களில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து இந்திய கடல் பகுதிகளை விட்டு விலகிச் செல்லும். இது காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. வட கிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வட கடலோர மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். அடுத்த 5 தினங்களில் எந்த முக்கிய மழை நிகழ்வுகளும் இல்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 401 மீ.மீ மழை பதிவாகி உள்ளது. இதன்படி இயல்பாக மழை பெய்துள்ளது. சென்னையில் 256 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 13 சதவீதம் அதிகம். மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் மழை அதிக அளவு பெய்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT