கோப்புப்படம் 
தமிழகம்

காஞ்சிபுரம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுக்கா பள்ளிகளுக்கு மழை விடுமுறை

செய்திப்பிரிவு

சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுக்கா பள்ளிகளுக்கு இன்று மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுக்கா பள்ளிகளுக்கு இன்று (டிசம்பர் 12) மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறும்போது, “தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (டிச.13) வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வரும் நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் மேல் தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று பெரும்பாலான இடங்களிலும், வரும் 13, 14-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 15-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் லட்சத்தீவு பகுதிகள், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT