தமிழகம்

மேன்டூஸ் புயல் தாக்கி சேதமடைந்த படகுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த தேவனேரிமீனவர் குப்பத்தில் புயல் பாதிப்புகுறித்து நேற்று மீன்வளத் துறைஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள், படகு இன்ஜின் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

இதேபோல், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் குப்பத்திலும் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது, தேவனேரி மற்றும் கொக்கிலமேட்டில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். பூமிக்கு அடியில் மின்வயர்களை கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் மனு அளித்தனர். ஆய்வின்போது, திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் விஜயலட்சுமி, மீன்வள கழக பிரிவு அலுவலர் சதிஷ் குமார் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேதமடைந்த படகு மற்றும் மீன்பிடி வலைகள் போன்றவற்றின் விவரங்களை மீன்வளத் துறை அதிகாரிகள் மூலம் துல்லியமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்களை முதல்வரிடம் தெரிவித்து மீனவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும். தூண்டில் வளைவு கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT