சென்னை: ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வண்டலூர்பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரோகினி மற்றும் பிரக்ருதி ஆகிய 2 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் யானைகள் இருப்பிடம் 21 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப் பெற்றுள்ளது. மஹிந்திரா சிட்டியில் உள்ள ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக நிறுவனம் பூங்காவின் யானைகள் இருப்பிடமுழு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் உதவியுள்ளது.
இத்திட்டத்தில், யானைகளுக்கான ‘கிரால்’ கால்நடை மருத்துவ வசதிக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு உணவு சமைப்பதற்கு சமையலறை, யானைகள்குளிப்பதற்கு வசதியாக தண்ணீர்தொட்டி மற்றும் தண்ணீர் தெளிப்பான் (shower) புதுப்பிக்கப்பட்டுள்ளது. யானைகள் இருப்பிடங்களிலிருந்த புதர்கள், களைகள் அகற்றப்பட்டு, அகழி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 ஏக்கர்அளவில் யானைகளுக்கான தீவன தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் அவற்றை ரெனால்ட் நிசான் நிறுவன சமூக பொறுப்பு நிதி பிரிவு துணைத் தலைவர் ராமகிருஷ்ணா மற்றும் பூங்கா இயக்குநர் சீனிவாஸ் ரெட்டி ஆகியோர் நேற்று திறந்துவைத்தனர். இந்நிகழ்ச்சியில் பூங்காவின் துணை இயக்குநர் ஆர்.காஞ்சனா, உதவி இயக்குநர் பொ.மணிகண்டபிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.