ஜி.கே.நாகராஜ் 
தமிழகம்

தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு: அண்ணாமலை தலைமையில் அன்னூரில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

கோவை: தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி, அன்னூரில் நாளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அன்னூர் அருகே தொழிற்பேட்டை அமைக்க 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த திமுக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அவிநாசி-அத்திக்கடவு திட்டம் மூலம் 115 குளம், குட்டைகளுக்கு நீர் கிடைத்து விவசாயத்துக்கு அன்னூர் தயாராகும் வேளையில் அரசாணை பிறப்பித்திருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

எனவே, அந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணாமலை தலைமையில் அன்னூர் சந்திப்பில் நாளை (டிச.7) மதியம் 2 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் இருந்தும், பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவோ, சுட்டுக்கொல்லவோ தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கேரள அரசு பாலக்காடு மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் துப்பாக்கி உரிமம் பெற்ற நபர்களால் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துகிறது. எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி பாஜக விவசாய அணி சார்பில் வரும் 14-ம் தேதி கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, என்றார்.

SCROLL FOR NEXT