சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணினி அறிவு பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கணினி அறிவு பயிற்சி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 423 பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த தொகுப்பூதியத்தில் ரூ.6 ஆயிரம் உயர்த்தி, இனி மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அந்தவகையில், ஒரு கல்வியாண்டின் 11 மாதங்களுக்கு இந்த தொகுப்பூதியம் வழங்கப்படும் எனவும், இத்திட்டத்தின்கீழ் புதிய பயிற்றுநர்களை வேலைக்குஎடுக்கக் கூடாது எனவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதலின்படி அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் கணினி அறிவு பயிற்சி திட்டம்கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயிற்சி தொகை அதிகரிப்பு: கணினி பாடப்பிரிவை பயிலாத மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் ரூ.700 செலுத்தி இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றுவந்தனர். இந்நிலையில், கணினிஅறிவு பயிற்சி பெற மாணவர்கள் செலுத்தும் தொகை ரூ.700-ல்இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.