எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம் 
தமிழகம்

ஜி-20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி: டெல்லி புறப்பட்ட இபிஎஸ்

செய்திப்பிரிவு

சென்னை: ஜி-20 தலைமை பொறுப்பு 130 கோடி இந்தியர்களை தலைநிமிரச் செய்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (நவ.5) மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.5) முற்பகல் டெல்லி புறப்பட்டார்.

இதற்கு முன்னதாக இந்த அழைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், "உலக அரங்கில் வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜி-20 அமைப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமரின் கடின உழைப்பால், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் உயர்மட்ட பிரமுகர்களுடன் நல்லுறவைப் பேணி, இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியதன் காரணமாக, ஜி-20ன் தலைமைப் பொறுப்பு சாத்தியமானது. இது 130 கோடி இந்தியர்களை தலைநிமிரச் செய்துள்ளது. ஜி-20 தலைவர் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு
கிடைத்த ஓர் அங்கீகாரம் ஆகும். மேலும் ஜி-20 தலைமைப் பொறுப்பு என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய அளவுக்கு பெருமைக்குரியதாகும்.

பிரதமரின் தலைமையில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவ.5) நடைபெறவுள்ள ஜி-20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT