தமிழகம்

வட்டமலைக்கரை அணையில் 10,008 அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அடுத்த வட்டமலைக்கரை அணையில் 4-வது ஆண்டாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 650 ஏக்கர் பரப்பளவில் 25 அடி உயரம் நீர்த்தேக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள அணைக்கு, 1996-ம் ஆண்டுக்கு பின்னர் நீர் வழங்கப்படாததால் அணை வறண்டு காணப்பட்டது.

இந்த அணை மூலம் பாசன வசதி பெறும் 6,000 ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டன. அணைக்கு நீர் வழங்கக் கோரி கடந்த 2019-ம் ஆண்டு அணையில் 10,008 தீபம் ஏற்றி வழிபடத் தொடங்கினர். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அணைக்கு நீர் வழங்கப்பட்டது. பின்னர் இரண்டு முறை பாசனத்துக்கும் நீர் திறக்கப்பட்டது.

இந்த அணைக்கு தொடர்ந்து நீர் வழங்கவும், நீர் வழிப்பாதையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் விவசாயம் செழிக்க வேண்டியும்வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டி, உத்தமநாயக்கன்பட்டி, மயில்ரங்கம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று அணைப் பகுதியில் 10,008 தீபமேற்றி வழிபட்டனர்.

SCROLL FOR NEXT