தமிழகம்

கீழ்ப்பாக்கத்தில் புதிய தண்ணீர் பரிசோதனைக் கூடம்: குடிநீர் தரத்தை பொதுமக்கள் பரிசோதிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய தண்ணீர் பரிசோதனைக் கூடத்தில் பொதுமக்கள் குடிநீரின் தரத்தைப் பரிசோதித்துக்கொள்ளலாம்.

இது தொடர்பாக சென்னைகுடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை குடிநீர் வாரியம், தரமான குடிநீர் வழங்குதல் மற்றும் பாதுகாப்பான முறையில் கழிவுநீரகற்றும் பணிகளை மேற்கொள்வதோடு, குடிநீரின் தரத்தைப் பரிசோதிப்பதை ஒருங்கிணைந்த பணியாக மேற்கொண்டு வருகிறது.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கத்தில் ரூ.7 கோடியில் குடிநீரின் தரம் மற்றும் கழிவுநீரை நவீன முறையில் பரிசோதிக்க புதிய பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சேவையை முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கிவைத்தார்.

இந்த ஆய்வுக் கூடத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகள், வணிக பயன்பாடு, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பயன்படுத்தும் குடிநீரின் தரத்தைப் பரிசோதிக்ககீழ்க்கண்ட கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிநபர்பயன்பாடு ரூ.75, அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிகப் பயன்பாட்டு நீர் மற்றும் கிணறுகள், ஆழ்துளைக் கிணற்று நீர்போன்றவற்றைப் பரிசோதிக்க ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த பரிசோதனைக் கூடத்தில், குடிநீரின் தரத்தை நவீன முறையில் பரிசோதிக்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரைப் பரிசோதிக்கவும் தனித்தனியே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், குடிநீர் மற்றும் கழிவுநீரில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றைப் பரிசோதிக்க தனித்தனியாக நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், குடிநீர் தொடர்பான 23 பரிசோதனைகளும், கழிவுநீர் தொடர்பான 16 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இந்த சேவையைப் மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT