கும்பகோணம்: சில்லறை விற்பனைக் கடைகளில் டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிடக் கோரி கும்பகோணத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வணிக வரித்துறையினர் கடைகளுக்குள் வந்து டெஸ்ட் பர்சேஸ் என பொருட்களை வாங்கி அதற்கு உரிய ரசீது இல்லை எனக் கூறி அபராதம் விதிக்கின்றனர். அது போலவே சாலைகளில் ஆங்காங்கே நின்று கொண்டு, சரக்கு வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைத் துறைமுக சரக்ககங்களிலும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களை மாநில எல்லைகளில் வைத்து வரி ஆய்வு சோதனை செய்தால், வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டு அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
எனவே, வணிக வரித்துறையினரால் சில்லறை விற்பனை கடைகளில் மேற்கொள்ளப்படும் டெஸ்ட் பர்சேஸ், சரக்கு வாகனத் தனிக்கை போன்றவற்றை உடனடியாக கைவிட வேண்டும். வணிகர்களுக்கு வரி செலுத்தும் முறைகள் குறித்து உரிய பயிற்சியும், விழிப்புணர்வுகளும் ஏற்படுத்திட வேண்டும்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 வரை கும்பகோணம் மாநகரத்திற்குள் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டது.
இதனையொட்டி இன்று காலை, கும்பகோணத்திலுள்ள மாவட்ட வணிகவரித்துறை அலுவலகத்தில் தலைவர் சி.மகேந்திரன் தலைமையில் செயலாளர வி.சத்தியநாராயணன், துணைத்தலைவர் பா.ரமேஷ்ராஜா, துணைச்செயலாளர்கள் வேதம்முரளி, கு.அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டு, அலுவலக வாயிலில் கண்டன உரையாற்றி, மனு அளித்தனர்.