சென்னை: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் வசூலித்த தொகையை விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்ற மிலாப் செயலி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக வசூலித்த 30 லட்சம் ரூபாயை கோயில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதிக்க கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மிலாப் செயலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று கூறினார்.
கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டது. திருப்பணிக்கு தேவைப்படும் பணத்தை அளிக்க நன்கொடையாளர்கள் தயாராக இருக்கின்றனர்" என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக வசூலித்த தொகையை விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்ற மிலாப் செயலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மேலும், நன்கொடையாளர்கள் குறித்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கை கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் நீதிதிபதி உத்தரவிட்டார்.