சென்னை: அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரசு மருத்துவர்களின் தவறானசிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பிய நிலையில், அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. அதற்கெனமாநிலம் முழுவதும் தணிக்கை குழுக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் பொதுஅறுவை சிகிச்சை துறைத் தலைவர்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதிசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடக்க உள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “மாணவி பிரியாஉயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு அரசு மருத்துவர் சங்கம் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அது உண்மைஅல்ல. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம், குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் காவல் துறை சூழலுக்கேற்ப வழக்கின் தன்மையை மாற்றியமைக்கும். வரும் 23-ம் தேதி மருத்துவ வல்லுநர்கள் உடனானகலந்தாலோசனைக் கூட்டத்தில் அறுவை சிகிச்சைகள் குறித்தவழிகாட்டுதல்களும், வழிமுறைகளும் விவாதிக்கப்பட உள்ளன.அதன் அடிப்படையில் அதற்கானஅறிவுறுத்தல்கள் அனைத்து மருத்துவர்களுக்கும் வழங்கப்படும்” என்றார்.