ராமேசுவரம்: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்வமணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் நாகை, காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 14 மீனவர்கள் நவ.15-ம் தேதி கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கை பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி கிஷாந்தன் நேற்று விசாரித்தார். 14 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும் விசைப் படகு மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் அரசுடமையாக்கப்படுகிறது என்றும் நீதிபதி கிஷாந்தன் உத்தரவிட்டார்.