தமிழகம்

நாட்டிலேயே முதல்முறை - அரசு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள விருதுநகரில் பிரத்யேக வாட்ஸ் ஆப் எண்

இ.மணிகண்டன்

விருதுநகர்: நாட்டிலேயே முதன்முறையாக அரசு திட்டங்களையும் சேவைகளையும் இருக்கும் இடத்திலிருந்த தெரிந்துகொண்டு அதன்மூலம் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரத்யேக வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

நவீன உலகில் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பங் களுக்கு ஏற்ப பொதுமக்கள் இருந்த இடத்திலிருந்தே அரசு திட்டங்களையும், சேவைகளை யும், தகவல் வெளியீடுகளையும் அறிந்துகொள்ளும் வகையில், விருதுநகர் மாவட்டத்துக்கென பிரத்யேக வாட்ஸ் ஆப் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய வாட்ஸ் ஆப் இதனை செயல்படுத்திக் கொடுத்துள்ளது.

விருதுநகரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில், அமைச் சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த சேவையைத் தொடங்கி வைத்தனர். விருதுநகர் மாவட்டத்துக்கென பிரத்யேகமாக உருவாக்கப் பட்டுள்ள 94884 00438 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை பொது மக்கள் தங்கள் மொபைலில் பதிவு செய்துகொண்டு ஹாய் (Hi) என்று டைப் செய்து அனுப்பினால் போதும்.

தமிழுக்கு எண்1-ம், ஆங்கிலத்துக்கு எண் 2-ம் அழுத்த வேண்டும். அப்போது அரசின் அறிவிப்புகள், நலத்திட்டங்கள், சேவைகள், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, நகல் வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி என பதிவு செய்ய என அனைத்து லிங்குகளும் கிடைக்கும்.

அதோடு, மின்னணு வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய, வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குச்சாவடி நிலை அலுவலரை தெரிந்து கொள்ளுதல், முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, எங்கிருந்தும் எந்த நேரத்திலும் நிலவுடமை ஆவணங்கள்- பட்டா, சிட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படம், இணையவழி சான்றிதழ் சேவை, முக்கிய உதவி எண்கள், தமிழக அரசு துறைகளின் சமூக வலைதளங்கள், இணையதள முகவரிகள் போன்ற அனைத்தையும் பெற முடியும். இவ்வாறு மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT