கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களை கண்டித்து தீட்சிதர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் தர்ஷன் என்பவர் நேற்று மதியம் நடராஜர் கோயில் உள்ளே பொது தீட்சிதர்களின் செயலாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தர்ஷன் தீட்சிதரர், “எனது தந்தை கணேசன் பூஜை முறை இன்று (நேற்று) உள்ளது. இதனை மற்ற தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து ஏலம் விட்டுவிட்டனர். அந்த பூஜை முறையை தந்தைக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து கோயில் தீட்சிதர்கள் கூறுகையில், “இவர்கள் கோயிலுக்கு எதிராக செயல்பட்டனர். அதனால் இருவரை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளோம். ஆகையால் இவருக்கு பூஜை முறை அளிக்க முடியாது” என்றனர். சுமார் 3 மணி நேரம் கழித்து தர்ஷன் தீட்சிதர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.