விழுப்புரத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி தலைமையில் நடைபெற்றது. 
தமிழகம்

பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கக் கோரி பிப்.4-ல் சென்னைக்கு பழங்குடி இருளர் நடைபயண பேரணி

செய்திப்பிரிவு

விழுப்புரம்: திருக்கோவிலூர் போலீஸாரால் சித்ரவதை செய்யப்பட்ட இருளர் பழங்குடியினருக்கு உரிய நீதியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி தெரிவித்துள்ளார்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில்நடைபெற்றது. சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சங்கத்தின் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் பி.வி. ரமேஷ், மாநில பொருளாளர் நாகராஜன், மாநில துணைத் தலைவர் ஆதிமூலம், மக்கள் உரிமை கூட்டமைப்பு நிர்வாகி புதுச்சேரி சுகுமாரன் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேராசிரியர் பிரபா கல்விமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை, பழங்குடி இருளர்கள் மீது சுமத்தி, துன்புறுத்தி பணிய வைத்து சிறையில் அடைப்பது விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் காலங்காலமாக தொடர்கிறது. அந்த வகையில் கடந்த 2011-ம் ஆண்டில் திருக்கோவிலூர் பகுதியில்போலீஸாரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கும், சித்ரவதை செய்யப்பட்டவர்களுக்கும் கடந்த 11 ஆண்டுகளாக நீதி வழங்கப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்திய மாநில மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரின் பணியிடைநீக்கம் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவர்கள் பணியில் தொடர்கின்றனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவின்பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

உரிய விசாரணையை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய காவல்துறை மெத்தனமாக செயல்படுவதால் இந்த வழக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட இருளர் இனத்தவர்களுக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 4-ம் தேதி விழுப்புரம் முதல் சென்னை கோட்டை வரை பழங்குடி இருளர் நடைபயண பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதேபோல் இருளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, சாதிச்சான்று வழங்க வலியுறுத்தி நவம்பர் மாதத்தில் நடைபயண பேரணி நடைபெறவுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT