தமிழகம்

பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை

செய்திப்பிரிவு

சென்னை: திரைப்பட பாடலாசிரியர் சினேகன், சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இதே பெயரில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியும் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக ஜெயலட்சுமி மீது சினேகன் மாநகரகாவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தார். பதிலுக்கு ஜெயலட்சுமியும், சினேகன் மீது போலீஸில் புகார் அளித்தார். அதன்படி ஜெயலட்சுமி மற்றும் சினேகன் ஆகிய இருதரப்பு மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சினேகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என போலீஸாருக்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT