சென்னை: தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் (யுஜிசி தகுதி) சங்கமாநிலத் தலைவர் வெ.தங்கராஜ், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சுமார் 5,303 கவுரவவிரிவுரையாளர்கள் நீண்டகாலமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில், அரசு கல்லூரிகளில் உள்ளஉதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களில் 4 ஆயிரம் இடங்களுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநியமனம் நடைபெற உள்ளது.
இந்த நியமனத்தில் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி அனுபவத்துக்கு ஏற்ப சிறப்பு சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால், இது கவுரவ விரிவுரையாளர்களுக்கு பெரிய அளவில் பலனளிக்காது.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு வைத்து பணிவரன்முறை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.இல்லையெனில், தற்போது நடைபெறவுள்ள தேர்வில் 50 சதவீத இடஒதுக்கீடு கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும். இதுதவிர இந்த நியமனத்தில் வாய்ப்புபெறாதவர்களை வெளியேற்றும்போது நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன் உள்ளிட்ட துறையின் உயரதிகாரிகளை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.