சென்னையில் நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் பங்கேற்றனர். அவர்களுடன் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி.படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

சுற்றுலா மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: உலகம் முழுவதிலும் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தமிழகம் வருவதால், சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக அரசுகூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில், மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வு, கலாச்சாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுடன் அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவர் கூறியதாவது:சுற்றுலா துறையில் மிகச் சிறப்பாக செயல்படும் சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பழமை வாய்ந்த பல்வேறு கோயில்களை புதுப்பிக்கவும், சீரமைக்கவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கி வருகிறது. அதை பயன்படுத்தி, கோயில்களை நன்கு பராமரிக்க வேண்டும். உலகம் முழுவதிலும் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தமிழகம் வருவதால், இங்கு உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், அங்கு கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும் பட்ஜெட்டில் தமிழக அரசு கூடுதல் நிதிஒதுக்க வேண்டும். நாட்டின் பழம்பெரும் கலாச்சார மையமாக, பெருமைக்குரிய நிறுவனமாக கலாஷேத்ரா அறக்கட்டளை திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், சென்னை பட்டினப்பாக்கத்தில், மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பங்கேற்றார். அவர் பேசும்போது, “தமிழகத்தில் ஏழை மக்களுக்காக 56 லட்சம் இலவச கழிப்பறைகளை மத்திய அரசு கட்டித் தந்துள்ளது.ரூ.30 விலையுள்ள தரமானஅரிசியை ரூ.3-க்கு மத்திய அரசு80 கோடி பேருக்கு வழங்குகிறது. ஆனால், இதை தாங்கள் இலவசமாக வழங்குவதாக தமிழக அரசுகூறுகிறது. கரோனா ஊரடங்கில் 3 ஆண்டுக்கு ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு இலவசமாக 5 கிலோஅரிசி வழங்கியது” என்றார். தமிழகத்தில் ஏழை மக்களுக்காக 56 லட்சம் இலவச கழிப்பறைகளை மத்திய அரசு கட்டித் தந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

SCROLL FOR NEXT