தமிழகம்

மயிலாப்பூரில் 4 நிலைகளில் மெட்ரோ ரயில் நிலையம்: விரைவில் ஆரம்பக் கட்ட பணிகளை தொடங்க திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: மயிலாப்பூரில் தரையிலிருந்து 115 அடி ஆழத்தில் 4 நிலைகளில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது. அதாவது, 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையமாக கட்டப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை விரைவில் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன. இந்த திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (3-வதுவழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபோல, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மயிலாப்பூர் நிலையம் 3-வது மற்றும் 4-வது வழித்தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும். இங்கு பொதுத்தளம்,வணிக அலுவலகம், மேல் நடைமேடை, கீழ்நடைமேடை என 4 நிலைகளுடன் தரைக்குக் கீழே 35 மீ (115 அடி) ஆழத்தில் இந்தநிலையம் அமையவுள்ளது. இந்த நிலையத்தில் 4 சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட உள்ளன. மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்த நிலையத்தில் 115 அடி (35 மீட்டர்), 78 அடி (24 மீட்டர்) மற்றும் 55 அடி (17 மீட்டர்) ஆழத்தில் 3 அடுக்குகள் அமைக்கப்படவுள்ளன. இதுதவிர,பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்கான தளத்துடன் இந்த ரயில் நிலையம் அமையவுள்ளது. மயிலாப்பூரில் போதிய நிலம் மற்றும் சாலை அகலம் இல்லாததால், ஆழமான ரயில் நிலையமாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படும் போது, அது மிகப்பெரிய பொறியியல் அற்புதமாக இருக்கும்.

மயிலாப்பூர் மெட்ரோ ரயில்நிலையத்தின் முதல் தளத்தில் (தரையிலிருந்து 55 அடி ஆழத்தில்) மாதவரம்-சிறுசேரி சிப்காட் செல்லும் மேல்தளப்பாதை ரயில்களும், 2-ம் தளத்தில் (தரையிலிருந்து 78அடியில்) கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி செல்லும் ரயில்களும், 3-ம் தளத்தில் (தரையிலிருந்து 115 அடியில்) மாதவரம்-சிப்காட் செல்லும் கீழ்ப்பாதை ரயில்களும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ளது. மயிலாப்பூர்(திருமயிலை) மெட்ரோ ரயில் நிலையத்தில் 2 வழித்தடங்களை இணைக்கும் முக்கியமான நிலையமாக இருக்கும். இந்த நிலையம் தற்போதுள்ள ஆலந்தூர், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்கள் போல அமைக்க உள்ளோம். இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT