தமிழகம்

தமிழக மீனவர்கள் 3 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் மூவரை நிபந்தனைகளுடன் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து அக்.20-ம் தேதி கடலுக்குச் சென்ற கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் அருள் (36), கனகராஜ் மகன் அய்யப்பன் (30), சோனையன் மகன் சுந்தரம் (26) ஆகிய மூவரும் நெடுந்தீவு அருகே விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மூவரையும் கைது செய்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மீனவர்கள் மூவரும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT