சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் ரேடியோ அலை வலி நிவாரண சிகிச்சைக் கருவி, ரூ.7 லட்சத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் கருவி, மாதவிடாய் நிறுத்தத்துக்குப் பிறகு பெண்களுக்கான ஆலோசனை - சிகிச்சை மையம் மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் முழுஉடல் பரிசோதனைக்கு முன்பதிவுசெய்யும் வலைத்தளம் ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி, நோடல் அலுவலர் ரமேஷ், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன், மருத்துவர்கள் நந்தகுமார், ஸ்ரீதர், ரமேஷ் உள்ளிட்டோர்உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள ரூ.7 லட்சம் மதிப்புடைய கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் கண்டறியும் அதிநவீன உபகரணம் மூலம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும். தனியார்மருத்துவமனைகளில் ரூ.5,000 வரை செலவாகும் இந்த பரிசோதனை இங்கு முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
ரோட்டரி பங்களிப்புடன் ரூ.25லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டரேடியோ அலை வலி நிவாரண சிகிச்சைக் கருவி மூலம் நீண்ட நாள்வலி மற்றும் புற்றுநோய் வலிகளைநீக்க முடியும். இது அறுவை சிகிச்சைஇல்லாமல் வலி நீக்கும் முறையாகும். நுண்ணிய ஊசி மூலம் வலிஉண்டாகும் நரம்புகளில் ரேடியோ அலையைச் செலுத்தி வலிகளுக்கு நிவாரணம் அளிக்கலாம். தனியார் மருத்துவமனைகளில் ரூ.40,000 வரை செலவாகும் இந்த சிகிச்சை முறைகள், இலவசமாக வலி நிவாரணம் மற்றும் நோய்த் தணிப்பு பிரிவில் வழங்கப்படுகிறது.
மாதவிடாய் நின்ற பிந்தைய காலத்தில் பெண்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கும்மையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மையத்தில்மனநல ஆலோசனை, யோகா மற்றும் இயற்கை உணவு முறைஆலோசனை, மார்பகப் புற்றுநோய்கண்டறியும் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.1000 செலவில் முழுஉடல் பரிசோதனைக்கு முன்பதிவுசெய்யும் வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதிவு செய்யப்பட்டு உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி உரியவர்களுக்கு அனுப்பப்படும். பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.