வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வரி ஏய்ப்பு நோட்டீஸ் குறித்து புகார் அளித்த பாத்திமா பேகம். 
தமிழகம்

சொந்த வீடே இல்லாத பெண்ணுக்கு ரூ.45 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நோட்டீஸ்: வாணியம்பாடியில் சலசலப்பு

செய்திப்பிரிவு

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பேகம்(47). இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ள நிலையில், சொந்த வீடு கூட இல்லாத பாத்திமாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு வேலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து 45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் நோட்டீஸ் வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி யடைந்த பாத்திமா பேகம் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் பாத்திமா பேகத்தின் வீட்டுக்கு வந்து விசாரணை மேற்க்கொண்டனர்.

அப்போது தனது மகளுக்கு திருமணம் செய்ய வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்துள்ள தங்க நகைகளை மீட்க சென்றபோது பாத்திமா பேகம் பெயரில் அவரது ஆதார் மற்றும் பான்கார்டுகளை பயன்படுத்தி ஆம்பூர் துத்திப்பட்டு பகுதியில் F.N. டிரேடர்ஸ் என்ற பெயரில் ரூ.45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை முதலில் அடைத்து விட்டு அடமானம் வைத்த தங்கநகைகளை மீட்டுச் செல்லுமாறு வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாத்திமாக பேகம் தனது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டினை பயன்படுத்தி சிலர் 45 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இவர் குடியிருந்த வீடும் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு பகுதி என்பதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதையும் வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT