சென்னை: தமிழகத்தில் மழை பாதித்துள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும், சித்த மருத்துவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிடம் இருந்தும் காய்ச்சல் குறித்த தகவல்களை தினமும் பெற வேண்டும். காய்ச்சல் பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கையை உடனுக்குடன் தீவிரப்படுத்த வேண்டும். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில், அரசு, தனியார் மருத்துவமனைகள் மூலமாக தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.
கொசுப் புழு உற்பத்தியாகும் இடங்களை அடியோடு அகற்றி, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவேண்டும். மாசுபடாத, தூய்மையான குடிநீர் வழங்க ஏதுவாக போதிய அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்ய வேண்டும். உடைந்த குடிநீர் குழாய்களை உடனே சரிசெய்ய வேண்டும்.
நிவாரண முகாம்களில் சுகாதாரமான உணவு, குளோரின் கலந்தபாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்க கிருமிநாசினிகள் தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகள், ரத்த அணுக்கள், மருத்துவக் கருவிகள், ரத்தப் பரிசோதனை வசதிகள் போதிய அளவில் இருப்பு வைக்கவேண்டும். மக்கள் அதிகம் கூடும்இடங்களில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் பரவாமல் தடுக்க, கை கழுவுவது அவசியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இருமல், காய்ச்சல் உள்ளவர்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து, வீட்டிலேயே தனிமைப்படுத்தலாம். அனைத்து மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்.