தமிழகம்

புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக வாசகம்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில், அந்நாட்டு தேசியக்கொடி வண்ணத்தின் மீது, பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது என பதித்துள்ளது.

ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு பிரான்ஸ் ஆதரவாக உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்தில் உக்ரைனின் தேசியக் கொடி வரையப்பட்டு, அதன் மீது பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

பிரான்ஸ் துணை தூதரகத்தில் மேல் அந்நாட்டு தேசியக்கொடி பறக்க, கீழே உக்ரைன் கொடி வரையப்பட்டு அதில் இந்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுபற்றி விசாரித்தபோது, "போர்சூழலில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரான்ஸ் உள்ளது. உக்ரைனுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்க பாரிஸில் பழமையான கட்டடங்களில் உக்ரைனின் தேசியக்கொடி வண்ணமான மஞ்சள்-நீல வண்ண ஒளியை பரவசெய்கிறோம். தற்போது அனைத்து பிரான்ஸ் தூதரங்கள், துணை தூதரங்களில் உக்ரைன் தேசியக்கொடி பின்னணியில் உக்ரைனுடன் பிரான்ஸ் இருக்கிறது என்ற வாசகங்களை பதிவு செய்துள்ளோம். இதன் மூலம் மக்களுக்கு எங்கள் கருத்து சென்றடையும்" என்று தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT