தமிழகம்

குட்டி ஈன்ற தாய் யானையை காவல் காக்கும் தங்கை, மகன்: வால்பாறை வாகைமலையில் ஆச்சரியமூட்டும் காட்சி

செய்திப்பிரிவு

குட்டி ஈன்ற தாய் யானையை, கவனமாக கண்காணித்து, காவல் காத்து வருகின்றன அதன் சகோதரி யானையும், மகன் யானையும். வால்பாறை வாகைமலை பகுதியில் இந்த கண்கொள்ளக்காட்சியை கண்டு ஆச்சரியப்படுகின்றனர் பொதுமக்கள்.

தமிழக-கேரள வனப் பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம் வால்பாறை. இங்குள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன.

இவை அடிக்கடி அருகில் உள்ள தேயிலை தோட்டப் பகுதிகளுக்குள் நுழைவதும், குடியிருப்புகள், கடைகளை துவம்சம் செய்வதும், மக்கள் அவற்றை விரட்டுவதும் வழக்கம்.

இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறை வாகைமலை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை குட்டி ஈன்று, அந்தப் பகுதியை விட்டு நகராமல் உள்ளது.

யானைகள் கூட்டம்

இந்த யானையை, அதன் சகோதரி யானையும், மகன் யானையும் சில அடி தூரத்தில் நின்று காவல் காத்து வருகின்றன. இங்கிருந்து ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் 13 யானைகள் சுற்றித் திரிகின்றன.

இந்த கண்கொள்ளாக் காட்சியை அப்பகுதி மக்கள் பரவசத்துடன் பார்க்கின்றனர். எனினும், யானைகள் இருக்கும் பகுதிக்கு அருகில் மக்கள் சென்றுவிடவேண்டாம் என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

வனத் துறையினர் கண்காணிப்பு

“பொதுவாக தாய் யானை குட்டி ஈன்றால், அந்தக் குட்டியை விட்டு சிறிதுதூரம் கூட நகராது. குட்டி ஓரளவுக்கு நடந்து செல்லும் பக்குவத்துக்கு வந்த பின்னரே, குட்டியையும் அழைத்துக்கொண்டு, மற்றொரு இடத்துக்குச் செல்லும். அதற்கு 10 நாட்கள் முதல் 20 நாட்கள் ஆகலாம்.

தன் குட்டிக்கு மற்ற விலங்குகளாலோ, மனிதர்களாலோ துன்பம் நேரிடுவது தெரிந்தாலும், குட்டியுடன் தாய் யானை அந்த இடத்தை விட்டு நகரும். அப்படி நகரும்போது, குட்டி யானைக்கு ஆபத்து நேர்வதும்உண்டு. எனவே, பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்து வருகிறோம். மேலும், தாய் யானை இருக்கும் பகுதி, யானைக் கூட்டம் நிற்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்கின்றனர் வனத் துறையினர்.

இதுகுறித்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (என்.சி.எஃப்) நிர்வாகியும், வன விலங்குகள் ஆய்வாளருமான ஆனந்தகுமார் கூறியது:

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் வால்பாறையில் யானைகள் இடம்பெயர்வது அதிகமாக இருக்கும். இதே சமயங்களில்தான், காட்டு யானைகள் குட்டி போடுவதும் சகஜம்.

பசுமையான வனப் பகுதி

பெரும்பாலும் அடர்ந்த வனப் பகுதியில், தண்ணீரும், பசுமையான உணவும் கிடைக்கும் பகுதியில்தான் யானைகள் குட்டி ஈனும். இந்த யானையும் பக்கத்தில் உள்ள காட்டில்தான் குட்டி ஈன்றுள்ளது. இப்பகுதியில் உணவும், நீரும் நிறைய இருப்பதால், அங்கிருந்து இங்கு வந்துள்ளது.

மேலும், குட்டி ஈன்ற யானையை, அதற்கு நெருக்கமான உறவு முறையுள்ள யானைகள்தான் காவல் காக்கும்.

அந்த வகையில், இந்த யானைக்கு அருகில் நின்று கண்காணிக்கும் மற்றொரு பெண் யானை, இதன் சகோதரியாக இருக்கக்கூடும்.

மேலும், அதனுடன் இருக்கும் ஆண் யானைக்கு 6 அல்லது 7 வயதுதான் இருக்கும். இந்த யானையும் உடன் நிற்பதைப் பார்க்கும்போது, குட்டி ஈன்ற யானையின் பிள்ளையாக இருக்கும். அல்லது அதனுடன் நிற்கும் சகோதரியின் குட்டியாகவும் இருக்கலாம்.

பொதுவாக, ஆண் யானைகள் குறிப்பிட்ட பருவத்துக்குமேல் கூட்டத்தில் இருக்காது. அதற்கு பெண் யானைகளை விட கூடுதலான உணவு, நீர் தேவை. எனவே, அது தனியாகச் சென்று உணவு தேடி, சாப்பிடும். இந்த சிறிய ஆண் யானை, பெரிய யானையுடன் இருப்பதற்கு, அந்த 2 யானைகளில் ஒன்றின் குட்டியாக இருக்கலாம் என்று கருதவாய்ப்புள்ளது என்றார்.

ஆபத்தும் அதிகம்...

இதுகுறித்து வன விலங்கு ஆய்வாளர்கள் கூறும்போது, “யானைகள் பெரும்பாலும் காட்டுக்குள்தான் குட்டி ஈனும். மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து, குட்டி ஈனாது. இங்கு தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள வனத்துக்குள் குட்டியுடன், தாய் யானையும் வந்துள்ளதற்கு, உணவும், நீரும் இங்கு கிடைப்பதே காரணம். இது மிகவும் ஆபத்தானது.

சில ஆண்டுகளுக்கு முன் சோலையாறு பகுதிக்கு குட்டியுடன் வந்த தாய் யானை, ஆற்றைக் கடக்கும்போது குட்டியைத் தவறவிட்டுவிட்டது. ஆற்று வெள்ளத்தில் குட்டி அடித்துச் சென்றதால், தாய் யானையுடன் வந்த யானைக் கூட்டம் குட்டியைத் தேடி அலைந்தன. அவற்றின் பிளிறல் சப்தம் கேட்டு திரண்டு வந்த மக்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டியைக் காப்பாற்றினர். யானைக் கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க வனத் துறையினர் முயன்றனர். ஆனால், யானைகள் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டன. பின்னர், அவற்றின் வழித்தடத்தைக் கண்டறிந்து, குட்டி யானையை வனப் பகுதிக்குள் கொண்டுசென்று, யானைக் கூட்டத்துடன் சேர்த்துவிட்டனர். குட்டியும் அந்த கூட்டத்துக்குள் சென்று, தாயுடன் சேர்ந்துகொண்டது.

ஆனால், என்ன காரணத்தாலோ, யானையே குட்டியை சேர்க்காமல் துரத்தியடித்தது தாய் யானை. இதில், அந்த குட்டி யானை இறந்தே விட்டது. எனவே, தாய் யானை, குட்டியுடன் காட்டை விட்டு ஊருக்குள் வருவதால், அதைச் சார்ந்த யானைக் கூட்டத்தால் மக்களுக்கு மட்டுமல்ல; இயற்கை இடர்கள், வன விலங்குகளால் யானைக் குட்டிக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, இவற்றின் அருகில் பொதுமக்கள் செல்லக் கூடாது” என்றனர்.

SCROLL FOR NEXT