தமிழகம்

வாக்காளர் பட்டியல் திருத்த பணியை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதையடுத்து, பார்வையாளர்களாக 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தத்தை, 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இப்பணிகளை கண்காணிக்க, இந்திய தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துள்ளது. இவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்துவதுடன், பொதுமக்களை சந்தித்தும் வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்வார்கள். ஆய்வுக்குப்பின், தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்கள்.

அதன்படி, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர்அனில் மேஷ்ராம், தொழில்வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழக இயக்குநர் வெ.ஷோபனா, துணிநூல் ஆணையர் மா.வள்ளலார், வேளாண் துறை சிறப்புசெயலர் த.ஆபிரகாம், பூம்புகார்கப்பல் போக்குவரத்துக்கழக தலைவர் சு.சிவசண்முகராஜா, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குநர் சி.நா.மகேஸ்வரன், குறு, சிறு தொழில்கள் துறை சிறப்பு செயலர் ப.மகேஸ்வரி, நில நிர்வாக ஆணையரக கூடுதல் ஆணையர் ச.ஜெயந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT