தமிழகம்

மருத்துவப் படிப்புக்கு நடந்துவரும் பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று நிறைவு: ஒதுக்கீடு விவரம் அக்.29-ல் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் வரும் 29-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ், 1,380 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த 19-ம்தேதி தொடங்கியது. அன்றைய தினமே முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்தது. இதில் 65 இடங்கள் நிரம்பின. மறுநாள் 20-ம் தேதி நடந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வில் 565 இடங்கள் நிரப்பப்பட்டன.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் அக்.25-ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 27-ம் தேதி (இன்று) வரை கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் ஆர்.முத்துச்செல்வனிடம் கேட்ட போது, “மாணவர்கள், பெற்றோர் கேட்டுக் கொண்டதால் 27-ம்தேதி வரை கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல் https://www.tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் 29-ம்தேதி வெளியிடப்படும். நிர்வாக ஒதுக்கீடு கலந்தாய்வு 28-ல் முடிந்து, இடங்கள் ஒதுக்கீடு பட்டியல் 30-ல் வெளியிடப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT