தமிழகம்

கோவை கார் வெடிப்பு | ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாடு எதிரொலி: கைதான 5 பேரின் வாட்ஸ்அப் தகவல்களை கண்டறியும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 5 பேரும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாடு உடையவர்கள் என்பதை அறிந்த போலீஸார், சைபர் கிரைம் போலீஸார் மூலம் வாட்ஸ்அப் தகவல்களை கண்டறியும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கூட்டாளிகளான உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ்(27), பிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.இவர்களுக்கும், ஜமேஷா முபினுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் என்ன, தீட்டப்பட்ட சதித் திட்டம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களில் முகமது தல்காவின் தந்தை கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளதாக கூறப்படுகிறது. 5 பேரின் வீடுகளிலும் போலீஸார் சோதனை நடத்தினர். உயிரிழந்த ஜமேஷா முபின் மற்றும் 5 பேரும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே, இவர்கள் 5 பேரும் சதித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கலாம், தொலைபேசி உரையாடல் மூலமாக நடத்தாமல் வாட்ஸ்அப் மூலமாகவும், நேரடியாகவும் ஆலோசித்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், ஜமேஷா முபினுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பலர் உதவியிருக்கலாம் என்பதை சந்தேகிக்கும் போலீஸார், அது தொடர்பான விவரங்களை சேகரிக்க விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேபோல் இவர்களது செல்போன்களின் வாட்ஸ்அப்பில் இருந்த உரையாடல்கள் பலவும் அவ்வப்போது அழிக்கப்பட்டு வந்துள்ளன. எனவே, அழிக்கப்பட்ட உரையாடல்களை ரெக்கவரி செய்து ஆய்வு செய்ய சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் முயற்சி நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT