சென்னை: தமிழகத்தில் பருவமழை முடியும்வரை நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலிகுன்றம் அம்பேத்கர் சிலை அருகே "நடக்கலாம் வாங்க; கோரிக்கை மனுக்களை தாங்க" என்ற தலைப்பில் பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களைப் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கூறுகையில்," சைதாப்பேட்டை தொகுதியில் 20 நாட்களுக்குள் மனுக்களைப் பெற்று அந்த மனுக்களுக்கான பிரச்சினையை சரி செய்வதற்காக அந்தந்த அலுவலர்களும் உடன் வந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சைதாப்பேட்டை உள்ளடங்கிய பல்வேறு பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. பெரிய அளவில் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. தொடர்ந்து மழை பெய்து வந்தால் மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையை பொருத்தவரை மழைக்காலத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. 85 சதவீதம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது.
தமிழகத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக 381 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் பருவமழை முடியும் வரை முகாம்கள் நடத்தப்படும்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.