கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,609 கனஅடியாக உயர்ந்துள்ளதால், அணையில் இருந்து விநாடிக்கு 13,508 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி உட்பட 5 மாவட்டங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே பெய்த மழையால் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் ஏரி, குளம், குட்டைகள் நிறைந்துள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று (16ம் தேதி) விநாடிக்கு 6,774 கனஅடியாக இருந்து நீர்வரத்து இன்று (17ம் தேதி) காலை 6 மணியளவில் விநாடிக்கு 7,577 கனஅடியாகவும், 10 மணியளவில் விநாடிக்கு 12,609 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 13,508 கனஅடி தண்ணீர் பிரதான மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் தென்பெண்ணை ஆற்றின் இரு கரைகள் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. மேலும், அணைக்குள் தரைப்பாலம் மூழ்கிய தண்ணீர் சீறி பாய்ந்து செல்வதால், அவ்வழியே செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மேலும், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வும் பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் மூலம் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாம்பாறு அணை நீர்வரத்து அதிகரிப்பு: ஊத்தங்கரை பாம்பாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று(16ம் தேதி) விநாடிக்கு 1,157 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று(17ம் தேதி) காலை 1,255 கனஅடியாக அதிகரித்தது. அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 17 அடிக்கு உள்ளது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 1,295 கனஅடி வெளியேற்றப்படுகிறது. இதே போல் சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணைக்கு இன்று(17ம் தேதி ) 2வது நாளாக நீர்வரத்து 284 கனஅடியாக இருந்தது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மழையளவு: மாவட்டத்தில் ஓரிரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம்: பாரூரில் அதிகப்பட்சம் 55, ஓசூர் 41, ராயக்கோட்டை 25, சூளகிரி 24, கிருஷ்ணகிரி 19, தேன்கனிக்கோட்டை, தளி, போச்சம்பள்ளியில் தலா 15, நெடுங்கல் 13, அஞ்செட்டி 10, பெனுகொண்டாபுரம் 9, ஊத்தங்கரை 7.2 மி.மீ மழை பதிவானது. நேற்று பிற்பகலில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.