சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ள போனஸ் போதாது. சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை செயலருக்கு சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏஐடியுசி சார்பில் தீபாவளி போனஸ் 25 சதவீதம் கோரியிருந்தோம். ஆனால் ரூ.7 ஆயிரத்தை வருமான வரம்பாக கருதி, 10 சதவீத போனஸாக ரூ.8,400 அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், 10 சதவீத போனஸாக ரூ.15,444 வழங்க வேண்டும். ஆனால், ரூ.8,400 மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது குடும்பத்தின் தேவைக்கு போதுமானது அல்ல.
பேருந்தை தூய்மை செய்வோர் உட்பட ஏராளமான ஒப்பந்த ஊழியர்கள் ஆண்டுக்கணக்கில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கும், பணி நிரந்தரம் செய்யப்படாத தொழிலாளர்களுக்கும் சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.