சென்னை: சிறையில் உண்ணாவிரதம் இருந்துவரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக் கோரிய மனுவிற்கு தமிழக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நளினியின் தாயாரும், முருகனின் மாமியாருமான பத்மா தாக்கல் செய்த மனுவில், "சிறையில் உள்ள முருகனை வழக்கறிஞர்கள் அண்மையில் சந்தித்த போது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கடந்த 32 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பதால் உடல் எடை குறைந்து பேச முடியாது நிலையில் உள்ளார். எனவே,
முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரி வேலூர் சிறைத் துறையிடம் மனு அளித்தேன். ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க தமிழக அரசு, சிறைத்துறை டிஜிபி, ஐஜி, மற்றும் வேலூர் சிறைத்துறை எஸ்.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.