புதுடெல்லி: மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 3 மாதத்துக்குள் சட்டத் துறை அதிகாரியை நியமனம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்க தடை விதிக்க கோரி தமிழ்நாடு நூற்பாலை சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை, "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டதற்கு பின்னர்தான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும்" எனக் கூறி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மின்கட்டண உயர்வை அமல்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மின் கட்டணத்தை உயர்த்தவும், இது குறித்து முடிவெடுக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செயப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ஆணையங்களுக்கு சட்டத் துறை அதிகாரிகளை நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளதே அதை அமல்படுத்தவில்லையா?’ என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
அப்போது தமிழக அரசு தரப்பில், ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத் துறை அதிகாரியை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 மாதத்துக்குள் நியமிக்கப்படுவார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நூற்பாலைகள் தரப்பில், "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத் துறை அதிகாரி நியமனம் செய்யப்படும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத் துறை அதிகாரியை 3 மாதத்துக்குள் தமிழக அரசு நியமிக்க வேண்டும். மேலும் 3 மாத்தில் அதிகாரியை அரசு நியமனம் செய்யவில்லை என்றால், இந்த நீதிமன்றத்தில் மனுதாரர் மீண்டும் முறையிடலாம்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதேபோல் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.