சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம் 
தமிழகம்

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: தனியார் மருத்துவமனைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தானம் கொடுப்பவரின் சகோதரர் புகார் தெரிவித்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லீரல் பாதிக்கப்பட்ட ஜஸ்பிர் சிங் என்பவருக்கு அவரது உறவினர் நரேஷ்குமார் சாகர், கல்லீரல் தானம் வழங்க முன்வந்தார். அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு உரிய ஆவணங்களை அனுப்பி வைத்தது. இதனை பரிசீலித்த குழு, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கூறி, நரேஷ்குமார் சாகரின் சகோதரர், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கடிதம் அனுப்பினார். இதையடுத்து அறுவை சிகிச்சையை நிறுத்தி வைத்த மருத்துவமனை நிர்வாகம், அந்தப் புகாரை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், ஏற்கெனவே குழு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி உறுப்பு தானம் செய்யும் நரேஷ்குமார் சாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் , உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழு அளித்த ஒப்புதலை, மூன்றாம் நபர் அளித்த ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் ஒருபோதும் மறு ஆய்வு செய்யப்பட மாட்டாது. மருத்துவமனை அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு, தானம் அளிப்பவரின் சகோதரர் அளித்த புகார் தடையாக இருக்கவில்லை எனக் கூறி, மருத்துவ தகுதி அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

SCROLL FOR NEXT