தமிழகம்

பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து; நீதி விசாரணை தேவை: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் ரயில் நிலையங்கள், பாதுகாப்பான பயணம் மற்றும் குறைந்த கட்டணம் என்பதால் மக்கள் அனைவரும் ஆபத்தற்றது என்று ரயில் பயணங்களை விரும்புகின்றனர். வியாபாரிகளும் தங்கள் பொருட்களையும் அனுப்புகின்றனர்.

ரயில் இருப்பு பாதைகளையும், ரயில் பெட்டிகளையும், பராமரிக்கவும், பாதுகாக்கவும், வல்லுநர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளனர். நாட்டில் உணவு பொருட்கள், இயந்திர பொருட்கள், கூட்ஸ் பெட்டிகளில் கொண்டுசெல்லப்படுகிறது.

ரயில் போக்குவரத்து ஓய்வு இல்லாமல் நாள் முழுவதும் செயல்படுவதாகும். கடந்த 20-ம் தேதி அன்

று உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பதினான்கு பெட்டிகள் தூக்கி எறியப்பட்டு கொடூரமான முறையில் கவிழ்ந்துள்ளது. இதில் 120 பேர் உயிர் சேதம் ஏற்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது, 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடும், காயமடைந்தோருக்கு இலவச சிகிச்சையும், உதவித்தொகையும் வழங்கப்படுள்ளது. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விபத்து நடந்ததாக கூறப்பட்டு, மீட்புப் பணியும் நடந்துள்ளது.

நம்நாட்டில் ரயில் விபத்துகள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது, இதை யாவரும் அறிவர். சமீபகாலமாக நடைபெற்ற ரயில் விபத்துகள் தண்டவாள விரிசலால் ஏற்பட்ட விபத்துகள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏன் தண்டவாளங்களில் அடிக்கடி விரிசல் ஏற்படுகிறது? ரயில் தண்டவாளங்கள் தனியாரிடம் வாங்கப்படுகிறது. தரமான இரும்பைக் கொண்டு செய்வது ரயில் தண்டவாளம். இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் விபத்து அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. அதிவேக ரயில் சென்றதால் தண்டவாளத்தில் விரிசல் என்றால், பதினான்கு பெட்டிகள் தூக்கி எறியப்படுமா என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.

மேலும் விபத்துக்கு முன் ரயில் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது என்பதை அறிவிக்கவில்லை. அகலப்பாதை ரயில் வளைவான பகுதிகளில் அதிவேகமாக சென்றால் தண்டவாளத்தை விட்டு பெட்டிகள் தூக்கி எறியப்படும். நம்நாட்டில் தீயசக்திகளின் நாசவேலைகளில் இதுவும் ஒன்றா? இதனால் நாசவேலைகள் அரங்கேற்றி இந்தியாவில் மனித உயிர்சேதம், பொருள்சேதம் அடைய தீவிரவாதிகள் செய்யும் நாசவேலையா?

இதுபோன்ற விபத்துகளை ரயில்வே அதிகாரிகள் மட்டும் விசாரணை செய்தால் உண்மை மறைக்கப்படலாம். அதனால் மத்திய அரசு இந்த விபத்து குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, ரயில் தண்டவாளம் தரமானதா, ரயில் பெட்டிகள் தரமானதா மற்றும் நாசவேலையா என்பதை ஆராய்ந்து உண்மைநிலையை விசாரித்து மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT