உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை. 
தமிழகம்

மோசடி பத்திரப் பதிவு ரத்து நடைமுறைக்கு பிறகு 30,000 அங்கீகரிக்கப்படாத மனைகள் பதிவு: தமிழக அரசு தகவல்

கி.மகாராஜன்

மதுரை: தமிழகத்தில் மோசடி, போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு 30,000 அங்கீகரிக்கப்படாத வீட்டடி மனைகள் பதிவு நடைபெற்றிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் அரசின் அங்கீகாரம் பெறாத மனைகளை சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யும் பதிவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சரவணன் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் பத்திரப் பதிவு சட்டத் திருத்தம் 22 ஏ (போலி, மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் நடைமுறை) அமலுக்கு வந்த பிறகு நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத மனைகளின் பத்திரப் பதிவு விபரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘பத்திரப் பதிவு சட்டம் 22ஏ அமலுக்கு வந்த பிறகு இதுவரை 30,000 அங்கீகரிக்கப்படாத வீட்டடி மனைகள் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பதிவுத் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பதிவுத் துறை சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை அக். 17-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT