தமிழகம்

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடப்பாண்டில் 27 சிறுநீரக மாற்று சிகிச்சைகள்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடப்பாண்டில் மட்டும்27 சிறுநீரக மாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மருத்துவமனை டீன் பாலாஜி கூறியதாவது: சென்னை அரசு ஸ்டான்லிமருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொருத்தவரை உறுப்பு மாற்று சிகிச்சைகள் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூளைச்சாவு அடைந்த நபர்களிடம் இருந்து மட்டும் இதுவரை 135 சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டு, தகுதியானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஆகஸ்ட்மாதத்தில் விபத்தில் சிக்கிய கூலித் தொழிலாளி ஒருவர் உயர் சிகிச்சைக்காக ஸ்டான்லிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் இரு சிறுநீரகங்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன. அதில் ஒரு சிறுநீரகம் 33 வயதான நபர் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

கல்லீரல் தானம்: நடப்பாண்டில் மட்டும் நோயாளிகளின் உறவினர்கள், மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து 27 சிறுநீரகங்கள் பெறப்பட்டு, அவைஉரிய நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர். இவைதவிர அண்மையில் மூளைச்சாவு அடைந்த 20 வயது இளைஞர் ஒருவரின் கல்லீரல் தானமாகப் பெறப்பட்டு ஸ்டான்லி மருத்துவர்களால் 43 வயதுடைய நபருக்கு பொருத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT