வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் 3 பாட்டில் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக் கப்பட்டு்ள்ளார்.
இவர் மீதான ஒரு வழக்கின் விசாரணை தாமதம் ஏற்படுத்துவதை கண்டித்து, கடந்த மாதம் 8-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையும் தீவிர மாக நடைபெற்று வரும் நிலையில் உண்ணாவிரதத்தை கைவிட முருகன் மறுத்து வருகிறார்.
இதற்கிடையில், முருகனின் உடல் நிலை நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சிறையில் உள்ள மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அவருக்கு 3 பாட்டில் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.
இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘சிறையில் வழங்கப்படும் உணவை அவர் வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார். இருப்பினும் பழங்கள், உலர் திராட்சை உள்ளிட்டவற்றை சாப்பிடுகிறார். போதிய ஊட்டசத்து குறைபாடு காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கிறது.
இதற்காக சர்க்கரை உப்பு கரைசல் பவுடரை கைவசம் வைத்திருக்குமாறு கொடுத்துள்ளோம். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர்’’ என்றனர்.