தமிழகம்

இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கைது: வாசன் கண்டனம்

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 31-ம் தேதி அன்று ராமேஸ்வரப் பகுதி மீனவர்கள் வழக்கம் போல விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நவ.1-ம் தேதி காலை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், படகினையும் பறிமுதல் செய்ததோடு, மீனவர்களையும் கைது செய்து சென்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலும், சிறைபிடிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை இலங்கை அரசு கண்டுகொள்வதில்லை. மேலும் மத்திய அரசும் இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கை தடுத்து நிறுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இன்று இந்திய - இலங்கை நாடுகளின் மத்தியில் டெல்லியில் நடைபெறும் மீனவப் பிரச்சினை குறித்த 4 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இச்சூழலில் தமிழக மினவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இலங்கை கடற்படையின் இச்செயலை மத்திய அரசு கண்டிப்போடு இலங்கை அரசுக்கு உணர்த்த வேண்டும்.

கடந்த மாதம் இந்தியா வந்திருந்த இலங்கை பிரதமர் இரு நாட்டு மீனவர் பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று கூறியிருந்தார். எனவே மத்திய அரசு இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு இந்த பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்து, நல்ல தீர்வு காணும் வரை இலங்கை கடற்படையின் மனிதாபிமானமற்ற போக்கை நிறுத்த வலியுறுத்த வேண்டும்.

மேலும் தற்போது சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வற்புறுத்த வேண்டும். அதே போல ஏற்கெனவே இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஒப்படைக்கவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்த வேண்டும்.

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பெற்றுத்தரவும், கச்சத்தீவுப் பகுதியில் இந்தியாவின் அனுமதியைப் பெறாமல் எந்த ஒரு நடவடிக்கையும் இலங்கை அரசு எடுக்கக்கூடாது போன்றவற்றை இன்றையப் பேச்சு வார்த்தையில் முக்கியமாக இடம் பெறச் செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை.

இன்றைய பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்று, நல்ல தீர்வு ஏற்பட்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் நிம்மதியாக தொடர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT