தமிழகம்

ஆயுதபூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: இதுவரை 48 ஆயிரம் பேர் முன்பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: ஆயுதபூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணிக்க இதுவரை 48 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகள் அக்.4, 5-ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளன. இதற்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் நெரிசலின்றி பயணிக்கும் வகையில் இன்றும், நாளையும் (செப்.30, அக்.1) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல பிற ஊர்களில் இருந்தும் 1,650 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்.30, அக்.1, 2 ஆகிய நாட்களில் அரசு பேருந்துகளில் செல்வதற்காக சுமார் 48 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

வழக்கமாக விழாக்காலங்களில் இயக்கப்படுவதுபோல சென்னை, கோயம்பேட்டில் இருந்து செல்லும் சில பேருந்துகளை, தாம்பரம்மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ்ஆகிய பகுதிகளில் இருந்து இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பைபாஸில் (மாநகர போக்குவரத்து கழக பூந்தமல்லி பைபாஸ் அருகில்) இருந்து இயக்கப்படும். இதர ஊர்களுக்கு, வழக்கம்போல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். இந்த இடங்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பான அறிவிப்பு பலகைகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “பெரும்பாலானோர் இன்றும், நாளையுமே பயணிக்க வாய்ப்பிருப்பதால் இந்த 2 நாட்களும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், தேவைக்கேற்ப தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்” என்றனர்.

SCROLL FOR NEXT