சென்னை: பண்டிகைக் காலம் வருவதால், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படவுள்ளது. ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளன. இதன் காரணமாக, ரயில்நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இதைத் தவிர்க்கும் வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படவுள்ளது. இந்த கட்டணம் உயர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.