போக்குவரத்து துறையில் ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்களை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பலன்களை உடனே வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனைத்து போக்குவரத்து கழகங்களின் தலைமையகம், கிளை, மண்டல அலுவலகங்கள் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்தந்த பகுதியை சேர்ந்த சிஐடியு நிர்வாகிகள், சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்டவர்கள், ‘ஓய்வு பெறும் நாளிலேயே பணப் பலன்களை வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரைநிலுவையில் உள்ள பணப் பலனைஉடனே வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பினர்.

ஏராளமானோர் பங்கேற்பு: சென்னை பல்லவன் சாலையில்உள்ள மாநகர, விரைவு போக்குவரத்து கழக தலைமை அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, ஓய்வூதியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி ஓய்வு பெறுவோருக்கு அன்றைய தினமே பணப் பலன்கள் வழங்கப்படுகின்றன. போக்குவரத்து கழகங்களில் மட்டும் இவ்வாறு வழங்குவது இல்லை. கடந்த 2020 மே மாதம்முதல் ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற, உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப் பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

இவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1,200 கோடி நிலுவை தொகையை நிர்வாகம் செலவு செய்துவிட்டது. இதுவே பணப் பலன் வழங்க முடியாத நிலைக்கு காரணம். அது ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம். எனவே, எந்த காரணமும் கூறாமல், ஓய்வு பெற்றவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அனைத்து பணப் பலன்களையும் போக்குவரத்து கழகங்கள் உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT