தமிழகம்

நீதித்துறைக்கு தேவையான நிதியை உடனே வழங்கிடுக: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

செய்திப்பிரிவு

நீதித்துறைக்கான நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜனநாயகத்தின் முக்கிய தூணான நீதித்துறைக்கு மத்திய அரசு ரூ. 150 கோடி ஒதுக்கியது. இந்த நிதியை தமிழக அரசு செலவிடாததால் மத்திய அரசுக்கே திரும்பிச் சென்றுள்ளது. நீதித்துறையின் நூற்றுக்கும் அதிகமான பணிகளுக்கு அனுமதி வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க நீதித்துறை சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் நீதித்துறையின் உள்கட்டமைப்பு பணிகளை நிறுத்தி வைக்கும் அளவுக்கு அதிமுக அரசு செயல்படுவது வேதனை அளிக்கிறது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘‘நீதித்துறைக்கு நிதி ஒதுக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதா? தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி நிலை அறிவிக்கும் எண்ணம் அரசிடம் உள்ளதா? இந்நிலை தொடர்ந்தால் அரசியல் சட்டப்பிரிவு 360-ன்படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்’’ என தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் உயர் நீதிமன்றத்திடம் இருந்து இதுபோன்ற கண்டனத்தை எந்த அரசும் பெற்றதில்லை. இதனால் தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இனியாவது தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண மக்களின் இறுதி நம்பிக்கையான நீதித் துறைக்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT