தமிழகம்

பெண் போலீஸ் தற்கொலை முயற்சி: உயரதிகாரி தொந்தரவு செய்ததாக புகார்

செய்திப்பிரிவு

தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ், தன்னை உயரதிகாரி ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் வசிப்பவர் இந்துமதி(27). ஆயுதப்படை போலீஸாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பாலமுருகன். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த இந்துமதியை, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஆயுதப்படை பிரிவில் அதிகாரியாக இருக்கும் ஒருவர் இந்துமதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிந்தது. இதனால் மனமுடைந்த இந்துமதி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இந்துமதியிடம் சிலர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எழும்பூர் போலீஸார் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸார் விளக்கம்

இதுபற்றி போலீஸார் கூறும்போது, “கணவர் இறந்துவிட்டதாக பொய்யான தகவலை கூறி, காவலர் குடியிருப்பில் இந்துமதி வீடு வாங்கியிருக்கிறார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத இந்துமதி, விசாரணை நடத்திய அனைத்து அதிகாரிகள் மீதும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்’ என்றனர்.

SCROLL FOR NEXT