ஆயிரம் விளக்கு பகுதியில் வீட்டு உரிமையாளர் கொலையான வழக்கில் வாடகைக்கு குடியிருந்த பெண், தமது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (48). இவர் கடந்த 1-ம் தேதி கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இந்த கொலை வழக்கு பற்றி விசாரணை நடத்திய போலீஸார், இதுதொடர்பாக ஆயிரம் விளக்கை சேர்ந்த சுகந்தி (35), அவரது ஆண் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த யோவான் (26) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இந்தக் கொலை குறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட தனலட்சுமியின் வீட்டின் கீழ் தளத்தில் சுகந்தி வாடகைக்கு வசித்து வருகிறார். சுகந்தியின் நடவடிக்கை சரியில்லாததால் அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், வீட்டை காலி செய்யும்படி தனலட்சுமியும் கூறிவிட்டார். இது சுகந்திக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும், இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுகந்தி அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து தனலட்சுமியை தனது வீட்டில் வைத்து கடந்த 1-ம் தேதி கழுத்தை நெறித்து கொலை செய்தார்.
பின்னர், அவர் அணிந்திருந்த நகையை பறித்து சடலத்தை தனலட்சுமி வீட்டின் முன் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு போலீஸார் கூறினர்.