சென்னை: "சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: "சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை உடல்நலக்குறைவால் நேற்று மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.
25 ஆண்டுகள் எத்திராஜ் கல்லூரியில் பணியாற்றி, 2019-ஆம் ஆண்டுமுதல் கல்லூரி முதல்வராகவும் பொறுப்பு வகித்து மாணவிகளின் நன்மதிப்பைப் பெற்ற கோதை அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ளஎத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் கோதை (56), உடல்நலக்குறைவால் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார்.
கடந்த 25 ஆண்டுகளாக எத்திராஜ் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த கோதை, 2019 முதல் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பு வகித்து வந்தார். வேதியியல் துறை பேராசிரியரான கோதை,பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.