தமிழகம்

நவராத்திரியை முன்னிட்டு முதுநிலை கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு முதுநிலை கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2022–23-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் சிறப்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவராத்திரி விழாவைமுன்னிட்டு இறையன்பர்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக முக்கிய கோயில்களில் அந்தந்தமாவட்ட கலை பண்பாட்டுத் துறையினருடன் இணைந்து ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும்கலை நிகழ்ச்சிகளை நடத்தஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேச மங்கையர்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் புலவர் ராஜாராமின் தலைமையில் பட்டிமன்றம், மதுரைமீனாட்சியம்மன் கோயிலில் சுசித்ரா குழுவினரின் பக்திப் பாட்டு உள்ளிட்டவை நடைபெற உள்ளன. இதேபோல், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், சென்னை, சூளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் நவராத்திரி திருவிழாவின் போதுஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறவுள்ளன. நவராத்திரி திருவிழாவின் போது முக்கிய கோயில்களில் நடத்தப்படும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் இறையன்பர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT