தருமபுரியில் நேற்று திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் மணக்கோலத்தில் தம்பதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதினர்.
தருமபுரி அடுத்த மதிகோன்பாளையத்தைச் சேர்ந்த பெருமாள், காஞ்சனா தம்பதியின் மகன் மணிமாறன்(29). பி.இ. பட்டதாரியான இவருக்கும் தருமபுரி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நரசிம்மன், வாசுகி தம்பதியின் மகள் சித்ராவுக்கும்(26) நேற்று தருமபுரி கோட்டை மல்லிகார்ச்சுனேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்தது. சித்ரா எம்எஸ்ஸி படித்துள்ளார்.
இவர்கள் இருவரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், திருமண ஏற்பாடு செய்யப்பட்டபோது தேர்வு தேதியில் முகூர்த்த நாளும் அமைந்தது. நேற்று காலை சித்ராவுக்கும், மணிமாறனுக்கும் திருமணம் நடந்தது. உறவினர்களின் வாழ்த்துகளை பெற்ற மணமக்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத பெற்றோர்கள் ஆசியுடன் புறப்பட்டனர்.
தருமபுரி நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சித்ராவுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவரை மணிமாறன் காலை 9 மணிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று தேர்வு மைத்தில் இறக்கிவிட்ட பின்னர் தனக்கு ஒதுக்கப்பட்ட நல்லம்பள்ளி அடுத்த பந்தாரஅள்ளி அரசுப் பள்ளி தேர்வு மையத்துக்குச் சென்று மணிமாறன் தேர்வு எழுதினார்.